என்எல்சி நில எடுப்பு தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டம். எம்எல்ஏக்கள் வேல்முருகன், அருண்மொழி தேவன், விவசாயிகள் சாலை மறியல்.
வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு நில எடுப்பு சம்பந்தமாக அனைத்துக்கட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில், மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்மொழி தேவன், பாண்டியன் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் என்எல்சியால் பாதிக்கப்பட உள்ள விவசாயிகளை பங்கேற்க ஆட்சியர் பாலசுப்ரமணியம் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் ஆட்சியரின் செயலைக்கண்டித்து சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நில எடுப்பு விவகாரம் தொடர்பாக நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளை அனுமதிக்காததை கண்டித்து கூட்டத்தில் இருந்து தமிழக வாழ்வு கட்சி தலைவர் வேல்முருகன் வெளியேறினார். இதேபோல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவனும் கூட்டத்தில் புறக்கணித்து வெளியேறினார்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.