ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி சிங் இருப்பு செய்தார்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் நாட்டின மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி சிங் இருப்பு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஸ்ரேயா பி சிங் பேசும் போது தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நாட்டின மீன் வளங்களை பாதுகாத்து பெருக்கிட ஆறுகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திடும் திட்டத்தின் கீழ் 2022 – 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 40 இலட்சம் மீன்குஞ்சுகள் ரூ.1.24 கோடி செலவில் ஆறுகளில் இருப்பு செய்திடும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஆறுகளை தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ள உள்நாட்டு மீனவர்களின் வருவாயினை கணிசமாக அதிகரித்திட வேண்டுமென்ற நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான இயற்கை வகையான நாட்டின் மீன் இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிடாமல் பாதுகாத்துப் பெருக்கி அவற்றை அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்து சென்றிடும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின மீன்குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம் உயிரனங்களின் உயிர்ச்சமநிலையை பாதுகாத்திட முடியும். நாட்டின மீன்வளத்தினைப் பாதுகாத்திட, நாட்டின மீன்களை அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையங்களில் தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் சேல்கெண்டை, கல்பாசு, இந்திய பெருங்கெண்டைகள் ஆகிய மீன்குஞ்களின் பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரித்துவிடும். இத்திட்டத்தின் கீழ் மீன்குஞ்சுகள், மீன்விரலிகளாக 80 மி.மீ முதல் 100 மி.மீ அளவில் வளர்த்தெடுக்கப்பட்டு காவிரி ஆற்றில் 1.70 இலட்சம் மீன்குஞ்சுகள் இன்றையதினம் இருப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை துணை இயக்குநர் திரு.வேல்முருகன், உதவி இயக்குநர் திரு.யுவராஜ், அரசு அலுவலர்கள், மீனவர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.