பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்பே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டின்போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது. காளைகளுடன் அனுமதிக்கப்படும் இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். காளையர்கள் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ், போட்டிக்கு 2 நாளுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்து, கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை.
அரங்கில் 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதி அளவு மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *