ஏ பி பிரபாகரன் செய்தியாளர்,பெரம்பலூர்
குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் பெரம்பலூர் எஸ்பி தகவல்.
பெரம்பலூர். ஜன.7.பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி அவர்கள் மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அசூர் கிராமம் ஊராட்சி மன்ற தலைவர் அலுவலகம் அருகே ஆகிய இடங்களில் பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேற்படி நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி பேசுகையில் பெண் குழந்தைகள் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பள்ளி்க்கூடத்தில் நண்பர்களிடம் பழகுவதைப் போன்று வீட்டில் பெற்றோரிடமும் பழக வேண்டும் என்றும் பள்ளியிலோ அல்லது பொது இடங்களிலோ உங்களிடம் யாராவது தவறாக நடந்து கொள்ள முயன்றால் அவர்கள் பற்றிய தகவலை பொற்றோரிடமோ பள்ளி ஆசிரியர்களிடமோ அல்லது காவல் நிலையத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறை எப்போதும் உங்களுக்கு உதவி செய்ய காத்திருப்போம் என்றும் பேசினார்.
குழந்தைகளுக்கு தொடுதல் முறையை பற்றி செயல்முறை பயிற்சியும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மங்களமேடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜனனி ப்ரியா குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.