ஆறுமுகநேரியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழாவை முன்னிட்டு விவசாயம் வளம் பெற கலச விளக்குவேள்வி பூஜை நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்பு விழா நடைபெற்றது. குரு பூஜை, வினாயகர் பூஜையுடன் தொடங்கிய கலச விளக்குவேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி.ஆர்.முருகன் தீபம் ஏற்றி வழிபாட்டு மன்றத்தை திறந்து வைத்தார்.
விவசாயம் சிறக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து பெண்கள் வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டது. மின்சார வாரிய ஆய்வாளர் சக்திவேல் வழங்கினார்.
அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்குலத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் இணைச்செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.
விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் செந்தில் சுப்ரமணியன், பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் கிருஷ்ண நீலா, செல்லத்துரை, வட்ட தலைவர் தேவராஜுலு, கோவில்பட்டிமன்ற தலைவர் அப்பாசாமி, ஆறுமுகநேரி மன்ற தலைவி மரகதம், துணைத் தலைவர் ஜெயராணி, செயலாளர் நடராஜன், பொருளாளர் நாகம்மாள், இணைச்செயலர் நளினி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆறுமுகநேரி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.