இரா. இயேசு ராஜ் செய்தியாளர்,தஞ்சைமாவட்ட செய்தியாளர்
தஞ்சாவூர், ஜன.7-
தஞ்சை பூக்கார முதல் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தங்கம். இருவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். இவர்களுக்கு பிரின்ஸ் இன்பன்ட்ராஜ், பிரனேஷ் இன்பன்ட்ராஜ் ( வயது 23) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் பிரனேஷ் இன்பன்ட்ராஜ் பி.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். தற்போது லயன்ஸ் கிளப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டியில் உறுப்பினராகவும், தமிழரின் தலைமை விவசாய சங்கத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாகவும் உள்ளார்.
இவர் சிறு வயதில் இருந்தே சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் வசிக்கும் குடியிருப்பில் டவர் ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பிரனேஷ் இன்பன்ட்ராஜ் டவர் அமைக்க கூடாது என்பதை வலியுறுத்தி பொதுமக்களை திரட்டி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். அதன் விளைவாக டவர் அமைப்பது கைவிடப்பட்டது. இதுபோல் குடியிருப்பில் தெரு விளக்கு எரியவில்லை , தண்ணீர் வரவில்லை போன்ற அடிப்படை பிரச்சனைகள் வரும்போது இவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்து பிரச்சனையை தீர்ப்பதில் முன்னோடியாக விளங்கினார். இவர் தொடர்ந்து பல்வேறு சமூக சேவை பணியில் ஈடுபட்டார். செய்த விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளமான இன்டஸ்ட்ராமில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்து உரிய விசாரணை நடத்தி பரிசீலித்து மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள 2 பல்கலைக்கழகங்கள் பிரனேஷ் இன்பன்ட்ராஜ்க்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இதுபோல் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் இவரது சமூக சேவையை பாராட்டி 30-க்கும் மேற்பட்ட விருது, பதக்கங்கள் வழங்கி கவுரவித்தது.
இது குறித்து பிரனேஷ் இன்பன்ட்ராஜ் கூறும்போது:-
எனக்கு சிறுவயதில் இருந்தே சமூக சேவையில் ஈடுபாடு உண்டு. எனக்கு உறுதுணையாக எனது பெற்றோர், சகோதரர் மற்றும் பாட்டி விசுவாசம் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். இதேபோல் லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் அக்ரோ சிட்டியும் எனக்கு பக்க பலமாக உள்ளது. இதனாலேயே என்னால் சாதிக்க முடிந்தது. தொடர்ந்து அரசு பணியில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு எழுத்து தேர்வுகளை எழுதியுள்ளேன். அரசு பணி கிடைத்தாலும் என் சமூக சேவையை கைவிடமாட்டேன். அது தொடர்ந்து நடைபெறும் என்றார்