நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி போலீசார் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அம்பாசமுத்திரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சம்பந்தப்பட்ட போலீசார் சிலர் வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு ஒன்றில் தொடர்புடைய நபர்களின் பற்களைப் பிடுங்கி, அம்பாசமுத்திரம் கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவரான சப் கலெக்டர் விசாரணை மேற்கொள்ள கடந்த மார்ச் 26-ந்தேதியன்று நெல்லை மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் பல்வீர்சிங் மார்ச் 29-ந்தேதியன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த கல்லிடைக்குறிச்சி காவல் நிலைய முதல்நிலைக் காவலர் ராஜ்குமார், வி.கே.புரம் காவல்நிலைய காவலர் போகபூமன், அம்பாசமுத்திரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், கல்லிடைக்குறிச்சி வட்டக் காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, வி.கே.புரம் வட்டக் காவல் ஆய்வாளர் பெருமாள், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், அம்பாசமுத்திரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சந்தானகுமார், அம்பாசமுத்திரம் காவல் நிலைய முதல்நிலை காவலர் மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த புகார்கள் தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டரின் 26-ஆம் தேதியிட்ட உத்தரவிற்கிணங்க, சேரன்மகாதேவி உட்கோட்ட நடுவரான சப் கலெக்டர் விசாரணை மேற்கொண்டு, தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை நெல்லை மாவட்ட கலெக்டருக்கு 3-ந் தேதி சமர்ப்பித்துள்ளார். சேரன்மகாதேவி சப்-கலெக்டரின் முதற்கட்ட விசாரணை அறிக்கை மற்றும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் அமைந்துள்ள வேறு காவல் நிலையங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாக வந்த புகார்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று 4-ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம் அரசிற்கு நெல்லை கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார். நெல்லை கலெக்டரின் பரிந்துரையை ஏற்று, அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில், தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்சிங் மீதும் மற்ற காவல் துறையினர் மீதும் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாகவும், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் வரப்பெற்றுள்ள புகார்கள் குறித்தும், விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச்செயலாளர் அமுதாவை உயர்மட்ட விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தமது விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *