உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ஆம் தேதி அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ள நிலையில் அதற்கான முகூர்த்த கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து முதற்கட்ட பணியாக ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு வெளியேறி காளைகள் வந்து சேரும் இடமான கலெக்ஷன் பாயிண்ட் தயார்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு காளைகளை உரிமையாளர்கள் சுலபமாக சேகரிக்கும் பொருட்டு இந்த காளைகள் சேகரிக்கும் பகுதி தயார்படுத்தப்பட்டு வருகிறது.
பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, துணை தலைவர் சுவாமிநாதன், செயல் அலுவலர் ஜுலான் பானு, உதவி செயற்பொறியாளர் கருப்பையா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் முன்னிலையில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக காளைகள் வெளியேறும் பகுதியில் உள்ள சாத்தியார் அணை ஓடையில் தற்போது தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அதற்கான தடுப்புகள் அமைப்பது குறித்து பேரூராட்சி துறையினர் பார்வையிட்டனர்.