புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாரா யணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக கவர்னர் ரவி தமிழக அரசுக்கு எதிராக கருத்து கூறி வருகிறார். தற்போது சட்டப்பேரவையில் அரசை அவமதித்துள்ளார். சொந்த கருத்தை திணிக்க கவர்னருக்கு அதிகாரமில்லை. அத்துடன் தேசியகீதம் இசைக்கும் முன் வெளியேறி அவமதிப்பு செய்துள்ளார். அரசியலமைப்பை அவமதிப்பு செய்துள்ளதால் பதவியிலிருந்து ரவி விலகவேண்டும். இல்லாவிட்டால் குடியரசுத்தலைவர் இதில் தலையிட்டு அவரை பதவிநீக்கம் செய்யவேண்டும். ஒரு நிமிடம் கூட கவர்னர் பதவியில் இருக்க ரவி தகுதியற்றவர். மோடி அரசு தூக்கி எறியப்படும். அப்போது மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மதசார்பற்ற அணிகள் ஒருங்கிணைக்கும் பணியை ராகுல் செய்து வருகிறார். அதுபோல் நிதிஷ்குமார், சரத்பவார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
கவர்னர் ரவியின் சட்டப்பேரவை செயல்பாடு தமிழகத்தின் கறுப்பு நாள். புதுவையில் சாராய ஆறு ஓடுகிறது. ரெஸ்டோபார், நடனநிகழ்வு போன்றவற்றால் கலாச்சாரம் சீரழிந்து மக்கள் அவதியறுகின்றனர். தொடர்ந்து போராடுவோம். நீதிமன்றமும் செல்வோம். கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் சரளமாக கிடைக்கிறது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள், பள்ளி, பஸ்நிலையம், கல்லூரி அருகே கிடைக்கிறது. இதில் ஒன்றை சாப்பிட்டால் 2 மணி நேரம் போதையாக இருக்கும் சூழலால் இளம் சிறார்கள் அடிமையாகின்றனர். போதைப்பொருளை ஒழிப்போம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மாநாடு நடத்துகிறார். புதுவையில் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸில் போதைப்பொருள் கலாச்சாரத்தை அமித்ஷாவால் தடுக்க முடியவில்லை. செயல்படாத ஊழல் அரசாக புதுவை அரசு உள்ளது. பா.ஜனதாவுக்கு சென்றவர்கள் நடுரோட்டில் நிற்கின்றனர். அதில் ஓர் உதாரணம் ஏனாம் எம்.எல்.ஏ. அசோக்.
ஆளுங்கட்சிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போராட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ் நடத்துகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கூட்டணி உள்ளது. முதல்-அமைச்சரை விமர்சித்திருந்தால், போலீஸ் துறையை வைத்திருக்கும் பா.ஜனதா அமைச்சர் மூலம் நடவடிக்கை எடுக்காமல் போலியாக வேஷம் போடுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *