கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, தொடர்ந்து நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. இன்று அணைக்கு, விநாடிக்கு 655 கன அடி நீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 720 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த பல நாட்களாகவே, தொடர்ந்து அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் வெளியேறி வருகிறது.
குமட்டலை ஏற்படுத்தும் வகையில் குவியல், குவியலாக நுரை வெளியேறுவதால், பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். மேலும், பொங்கி வரும் நுரை குவியலில், ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.