புதுச்சேரி சித்தன்குடியைச் சேர்ந்த ஒரு பெண் வாடகை வீடு கிடைக்குமா என்று ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தார். அப்போது புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு அப்பார்ட்மெண்டின் பெயர், விலாசம், புகைப்படங்களுடன் 2-வது மாடியில் வாடகைக்கு வீடு தயாராக உள்ளது என ஆன்லைனில் விளம்பரம் இருந்தது. அதன் கீழே இருந்த செல் நம்பரை தொடர்பு கொண்டு அந்தப் பெண் வாடகை மற்றும் அனைத்து விவரங்களை கேட்டு தெரிந்துள்ளார். எதிர்முனையில் பேசியவர் சொன்னதை நம்பி அவர் கொடுத்த கூகுள் பே அக்கவுண்டில் ரூ.1 லட்சம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக அனுப்பினார். பணத்தை அனுப்பிய பிறகு அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்து ஆன்லைனில் கொடுத்த விலாசத்தில் சென்று பார்த்தார். அங்கு அடுக்குமாடி குடியிருப்பு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த பெண் புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக இணைய வழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி விசாரித்து வருகிறார். மேலும் அவர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை சரிபார்த்த போது அது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் இது போன்ற ஆன்லைனில் வருகிற தகவலை வைத்து பணத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம். இத்தகைய விளம்பரங்கள் இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக் கப்பட்டு ஏமாற்ற பயன்படுவதால் பொது மக்கள் இணைய வழி விளம்பரங்களை நம்பி யாருக்கும் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.