அழகர்கோவில்,
திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தளங்களில் ஒன்றானது மதுரையை எடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவானது கடந்த மே மாதம் 1ஆம் தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தினம்தோறும் கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்காக கடந்த மே மாதம் 3ஆம் தேதி புதன்கிழமை தங்க பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பாடானார். பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்து கள்ளழகர் பெருமாள் பூ பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் வழிநடையாக வந்து நேற்று காலை 11.15 மணி அளவில் அழகர் மலை வந்தடைந்தார்.
அவருக்கு 250 கிலோ பல வண்ண மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 21 பூசணிக்காய் களில் கற்பூரம் ஏற்றி பெரியவாச்சான் நுழைவாயில் வழியாக வந்த கள்ளழகரை திருஷ்டி சுத்தி கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் வரவேற்றனர்.
தொடர்ந்து தங்க பல்லக்கு பரிவாரத்துடன் கோவிலுக்குள் சென்று இருப்பிடம் சேர்ந்தார். இன்று உற்சவர் சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம் மேற்பார்வையில் திருக்கோவில் செயல் அலுவலர் ராமசாமி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.