துபாயில் இன்டர்நேஷனல் யூத் யோகா பெடரேஷன் மற்றும் சுப்ரா ஸ்கூல் ஆப் யோகா சார்பில் முதல் சர்வதேச அளவிலான யோகா சேம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.கடந்த 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா, துபாய்,அபுதாபி ஷார்ஜா, அமெரிக்கா, மெக்சிகோ,கனடா,மஸ்கட்,சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் மயூர் ஆசனம், திருவிக்கிரம் ஆசனம், சிரசாசனம்,பூரண ஸலபாசனம்,என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் ஓசோன் யோகா ஆசிரியர் பாலகிருஷ்ணன், நானகனி யோகா ஆசிரியர் மதனிகா ஆகியோர் தலைமையில் சென்ற கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்களான கனித்ரா,தேவகர்ஷன்,திவித் மற்றும் கல்லூரி மாணவர் கௌதம் உள்ளிட்ட நான்கு பேரும் தங்கப்பதக்கங்களை வென்று முதல் பரிசையும் பள்ளி மாணவன் கீர்த்தி யோகன் வெள்ளி பதக்கம் வென்று இரண்டாம் பரிசையும் பெற்று சாதனை படைத்தனர்.
யோகா போட்டியில் வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.