கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 1-ஆம் தேதி 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையும், 5-ஆம்தேதி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையும் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளி வளாகங்களில் தூய்மை பணி, வகுப்பறைகள் பராமரிப்பு, சேதமடைந்த மேஜைகள் சரி பார்ப்பு ஆகியவை தீவிரமாக நடந்து முடிந்துள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டி, கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் 80 அரசு பள்ளிகளும், 179 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 3½ லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடபுத்தகங்கள் பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, திருவல்லிக்கேணி பகுதிகளில் நடந்து வருகிறது. அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் அங்கு சென்று தங்கள் பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்கின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் பள்ளிகள் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள குடோனில் பெற்றுச் செல்கின்றன.