தமிழ்நாட்டில் இன்று டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் செந்தில்பாலாஜி சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படும் நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக தேர்தல் தோல்வி பாஜகவுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. கர்நாடக தேர்தல் முடிவானது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை, ஐடி, சிபிஐ ஆகியவற்றை பாஜக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில் ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத நேரத்தில் திட்டமிட்டே பாஜக ஐடி ரெய்டை நடத்துகிறது. முதல்வர் வெளிநாட்டு பயணம் மூலம் முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில் அதை திசை திருப்ப இந்த சோதனை நடத்தப்படுகிறது. கரூர், கோவை உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற்றுத் தந்த செந்தில் பாலாஜியை முடக்க திட்டமிட்டு ஐடி சோதனை நடத்தப்படுகிறது. திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்தவே போலீசுக்கு தெரிவிக்காமல் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எத்தனை சோதனை நடத்தினாலும் திமுகவுக்கு கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.