இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. அதுபோல் புதுச்சேரியிலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று புதுவை போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுமக்களுக்கு ஆதரவாக சுயேட்சை எம்.எல்.ஏ. நேருவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக தற்போது புதுச்சேரியில் அபராதம் விதிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே போக்குவரத்து விதியை பின்பற்றி புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் ஹெல்மெட் அணிய தொடங்கி உள்ளனர். தற்போது கோடை வெயில் வருத்தெடுத்து வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க இருசக்கர வாகனங்களில் செல்லும் ஒரு சிலர் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள். அவ்வாறு ஹெல்மெட் அணிந்து செல்பவர்கள் வெயிலால் படாத பாடுபட்டனர். இதற்கிடையே கோடை வெயிலுக்கு இதமாக இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் ஏ.சி.ஹெல்மெட்டை தயாரித்துள்ளது. இதனை புதுவையில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிரத்தியேமாக தயாரிக்கப்பட்ட இந்த ஏ.சி. ஹெல்மெட்டை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அணிந்து பரிசோதனை செய்தார். விரைவில் இந்த ஏ.சி. ஹெல்மெட் புதுவையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.