சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும் இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகி வீட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல் புதுவை-திண்டிவனம் பைபாஸ் சாலை மொரட்டாண்டி பகுதியில் ரவிக்குமார் எம்.பி தலைமையில் அவரது வீட்டினருகே விடுதலை சிறுத்தை கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் ரவிக்குமார் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது. இன்றைக்கு பா.ஜனதா அரசு மறைமுகமாக சாவக்கரின் பிறந்தநாளிலே பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்திருக்கிறார்கள். சாவர்க்கார் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணானவர். மேலும் இந்திய சுதந்திரத்தை வன்முறை பாதையில் கொண்டு சென்றவர். காந்தியடிகளின் அகிம்சை வழியை நேர் எதிராக கொள்கையை கொண்டவர். அத்தகைய ஒருவர் பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பது என்பது இந்திய ஜனநாயகத்தை அவமதிப்பாகும். இதனால் விடுதலைக் கட்சி சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில வெளியீட்டு மைய செயலாளர் பொன்னிவளவன் மற்றும் வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.