ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள புதுச்சேரி அரசு சார்பில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரெயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரெயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரெயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது. அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரெயில், தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரெயிலும் விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரெயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் தற்போது வரை சுமார் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும், 120 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நோக்கி வந்த ரெயில் விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் மீட்பு மற்றும் உதவிப்பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் ஒடிசாவிற்கு செல்ல உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள அவசர கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அவசர உதவிக்காக 1070, 1077, 112, 0413-2251003, 2255996 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்த அவசர கால மையம் 24 மணி நேரமும் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *