டி. மகேஷ் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனாப்பட்டு ஊராட்சி பெரிய கோனாப்பட்டு பகுதியில் வசிப்பவர் பிரவீன் குமார். படித்துவிட்டு பட்டதாரியாக இருக்கும் இவர் வேலை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் இவரது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற 25 வருட காலமாக அப்பகுதி மக்களுக்கு காணல் நீராக இருந்த குடிநீர் பிரச்சினையை தீர்க்க சொந்த செலவில் இவரது மாமா முன்னாள் ராணுவ வீரர் அம்பிகாபதி உதவியுடன் ஆழ்துளை கிணறு அமைத்து சிறிய நீர்த்தேக்க தொட்டியையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரவீன் குமார் கூறுகையில்..
எங்களது பகுதியில் சுமார் 25 வருட காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் எடுத்து வர சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. என்னுடைய தந்தை உயிரோடு இருக்கும் பொழுது இந்த பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக என்னுடைய தந்தை இறந்து விட்டார். அவருடைய ஆசையை நிறைவேற்ற அவரது நினைவு நாளில் என்னுடைய மாமா உதவியுடன் குடிநீர் தொட்டியை அமைத்துள்ளோம். இதனால் சுமார் 200 குடும்பங்களின் 25 ஆண்டு கால பிரச்சனை தீர்ந்துள்ளது. என குரல் தழுதழுத்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.
குடிசை வீட்டில் வசித்தாலும் குபேரனின் அடையாளமாக மனிதநேயத்துடன் தந்தையின் ஆசையை நிறைவேற்றிக் கொடுத்த மகனின் செயலால் அப்பகுதி மக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.