புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை மின்துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் மின்துறை செயலிழந்து முடங்கியுள்ளது. புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. திடீர் என ஏற்படும் மின்சார நிறுத்தத்தை சரிசெய்தல், மின்மாற்றியில் பியூஸ் மாற்றுதல், மின்சார அளவீடு செய்தல் போன்ற முக்கியமான பணிகளுக்குக்கூட ஆட்கள் இல்லாமல் ஒப்பந்த பணியாளர்களை நம்பியே மின்துறை இருக்கிறது. புதுவை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நிலையை கையிள் எடுத்திருப்பதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். ஆனாலும் கூட மின்துறையில் ஏற்பட்டுள்ள ஆட்கள் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மின்துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியவர்கள் பணிஓய்வு பெற்ற நிலையிலும், கடந்த 10 ஆண்டுகளாக புதிய ஆட்கள் ஏதும் எடுக்காத நிலையிலும் பணி நியமனம் இன்று கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு இளநிலைப் பொறியாளர் 3 டிவிஷன்களை சேர்த்து பார்க்கும் நிலையை மாற்றி ஒரு தொகுதிக்கு ஒரு இளநிலைப் பொறியாளர் என்று நியமிக்க வேண்டும். மின்துறையில் உள்ள குறைபாடுகளை களைந்து, தேவையான ஆட்களை நியமனம் செய்து மக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.