நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார். ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *