நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல்
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.உமா தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 296 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இடம் வழங்கினார்கள்.
மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ். உமா மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, வருவாய்த்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000/- மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டதற்காக நாமக்கல் மாவட்டம் தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் மற்றும் பசுமை நாமக்கல் செயலாளர் மா.தில்லைக்குமார் ஆகியோர்களுக்கு சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கான முதன்மையாளர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ். உமா வழங்கினார்.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.13,500/- வீதம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் பேசி கருவியும், ரூ.6,450/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள், ரூ.1,680/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு உதவி உபகரணமும், ரூ.6,450/- மதிப்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95,580/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ். உமா வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ். உமா நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சிவக்குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.