எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே நாங்கூரில் கோலாகலமாக நடைபெற்ற மணிமாட கோவில் மகா சம்ரோக்ஷனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் 39வது திவ்ய தேசமாக் இக்கோவில் அமைந்துள்ளது. பிரதானமான மணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் புண்டரீகவல்லி தாயார் சமேத நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற ஸ்தலமான இங்கு தை அமாவாசையின் போது நடக்கும் 11 கருட சேவை நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது.
இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று காலை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. சம்ரோக்ஷனத்தை முன்னிட்டு கடந்த 13ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும், 14 ஆம் தேதி யாகசாலை பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன 17 ஆம் தேதியான இன்று காலை ஏழாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தனர் பின்னர் பட்டாச்சாரியார் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தி வைத்தனர். இதில் சீர்காழி கோட்டாச்சியர் அர்ச்சனா, வட்டாச்சியர் செந்தில்குமார், செயல் அலுவலர் அன்பரசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பக்தர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி எஸ்.பி. மீனா தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.