தென்காசி,

தென்காசி மாவட்டம், புளியங்குடி அசேன் ஹுசைன் தர்காவில் மொஹரம் பண்டிகை, இந்து- இஸ்லாமியர் சமுக நல்லிணக்கத்திற்கு எடுத்து காட்டாக பூக்குழி திருவிழா நடைபெற்றது.

புளியங்குடி அசேன் ஹுசைன் தர்ஹாவில் நடைபெற்ற மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது. மொகரம் பிறை பத்தாவது நாள் முகமது நபியின் பேரன் அசன் உசேன் கர்பலா போரில் கொல்லப்பட்டதின் நினைவாக புளியங்குடியில் உள்ள அசன் ஹுசேன் தர்காவில் மொகரம் மாதத்தின் பத்தாவது நாள் கந்தூரி விழா நடைபெற்றது.

அன்று மாலையில் தர்காவில் இருந்த புறப்பட்டு ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றுதல், சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தப்பட்டது. இரவு 10 மணியளவில் ஏராளமான இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து அசன் உசேன் நினைவாக தர்காவில் வளாகத்துக்குள் பூக்குழி இறங்கினர்.

பூக்குழி திருநாள் அன்று இஸ்லாமியகள் மட்டுமின்றி இந்துக்களும் விறகு, உப்பு ஆகியவற்றை நேர்த்தி கடனாக செலுத்தினார்கள்.

பூக்குழி இறங்கிய பின்னர் தீ கங்குகளை அகற்றி பின்னர் அந்த இடத்தில ஒரு பானைக்குள் பானைகாரம், அரிசி ரொட்டிகளையும் வைத்து புதைத்து விடுகின்றனர்.அதனை அடுத்தஆண்டு எடுத்து குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இதனை எராளமான இந்துக்களும் வாங்கி செல்கின்றனர்.

இந்த விழாவை பால்ராவுத்தர் வகையறா ஐந்து தலைமுறையாக நடத்தி வருகின்றனர். தற்போது நாகூர்மைதீன், தீவான்மைதீன், உசேன்ராவுத்தர், அசன்மதுசூதனன்,, காதர்மைதீன், மைதீன்பிச்சை, மற்றும் செட்டியார் வகையறாக்கள் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

மொகரம் திருவிழாவையொட்டி நடைபெற்ற குதிரை ஊர்வலம், கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஊர்வலத்தை காண புளியங்குடி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். புளியங்குடியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவை கொண்டாடி வருகின்றனர்

முகரம் பண்டிகையில் புளியங்குடியில் மட்டும் தான் முஸ்லிம்கள் நெருப்பை வளர்த்து நெருப்பில் இறங்கி அசன் உசேன் பெயரில் நோன்பிருந்து பூக்குழி இறங்கி நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்த விழா இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிகின்றனர்.

இந்த விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், கடையநல்லூர் தீ அணைப்பு அதிகாரி சேக் அப்துல்லா ஆகியோரது தலைமையில் போலீசாரும் தீ அணைப்பு வீரர்களும் செய்து இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *