திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக அரசு கணிப்பாய்வு அலுவலராக ஆனந்த் ஐ ஏ எஸ் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை பணிகளை கணிப்பாய்வு அலுவலர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், சவுக்கு மரம், ஜெனரேட்டர்கள், பொக்லைன் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை நேரில் பார்வையிட்டு தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டார்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து, கோட்டாட்சியர் சத்யா, வட்டாட்சியர் ஸ்டாலின், மக்கள் தொடர்பு அதிகாரி செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
