தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் படிக்கும் கண்பார்வை குறைபாடு உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
ஆன்லைன் வகுப்புகள் அதிகரித்ததால் கண்பார்வை குறைபாடு பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு படிப்பில் கவன சிதறுதல் மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலை ஏற்பட பார்வை குறைபாடு முக்கிய காரணமாக உள்ளது.
இதைத் துவக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க காணொளி காப்போம் திட்டம் செயல்படுத்த பட்டு வருகிறது. சுகாதாரத்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை பயிலும் மாணவர்களுக்கு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது.
பார்வைத்திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடியும், கண் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் செல்போனுக்கு குழந்தைகள் பெரிதும் அடிமையாகி விட்டனர். இதனால் பார்வைத் திறனில் குழந்தைகளுக்கு அதிக மாறுபாடு உள்ளது.
ஊட்டச்சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, சரியான நேரத்தில் தூக்கம் ஆகியவற்றை மாணவர்கள் கட்டாயம் கடைப்பிடித்தாலே பார்வையை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்நிலையில் திருவாரூர் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் ஆணையின்படி, ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில் தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், வலங்கைமான் வட்டாரத்தில் உள்ள ஆலங்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆவூர் நடுநிலைப்பள்ளி, தென்குவளை வேலி உயர்நிலைப் பள்ளி, அரித்துவாரமங்கலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, ஆவூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, இனாம் கிளியூர் உயர்நிலைப்பள்ளி, வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வலங்கைமான் அரசின பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் கண்பார்வை குறைபாடு உள்ள மாணவ,மாணவிகளுக்கு விலை இல்லா கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முன்னதாக ஆலங்குடி வட்டார உதவி கண் மருத்துவர் சுவாமிநாதன் மாணவ,மாணவிகளுக்கு கண் பரிசோதனை மேற் கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் மு. நாவளவன் தலைமையிலும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை கணேஸ்வதி தலைமையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகளுக்கு விலை யில்லா கண்ணாடிகள் வழங்கப்பட்டன.