பருவநிலை மற்றும் கடல் மாசுபாடு காரணமாக கடலில் மீன்வளம் குறைந்து மீனவர்கள் மட்டுமின்றி அனைவரும் பாதிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை குறைத்து அவற்றை கவனமுடன் அப்புறப்படுத்த வேண்டும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சுவாமிநாதன் பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது

இவ்விழாவில் கலந்து கொண்ட எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சௌமியா சுவாமிநாதன் அவர்கள் கூறியதாவது.

சுனாமிக்கு பிறகு கடலோர பகுதியும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்காக செல்போனில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு தரவுகள் மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் மீனவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதமாக சோலார் மீன் உளர்த்தும் கலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மீனவப் பெண்கள் எளிமையான முறையில் மீன்களை உலர்த்தி மதிப்பு கூட்டு பொருளாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத நிலையில் விற்பனை செய்ய முடியும். அதே போல் மீனவ பெண்களுக்கு என தனி உதவி மையம் அறிவிக்கப்பட்டு அதற்கான எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

மீன் விற்பனை மற்றும் மதிப்பு கூட்டு பொருள்கள் குறித்து சந்தேகம் இருந்தால் மேற்கண்ட எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மாசுபாடு காரணமாக கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது.

குறிப்பாக பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் அதிகரித்ததால் பயன்பாடு அற்ற இந்த பொருட்கள் அதிகமாக கடலில் சேர்ந்து மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அதே நேரம் அந்த மீன்களை உண்பதால் சுற்றியுள்ள அனைவருக்கும் அதன் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை பொதுமக்கள் பெருமளவு குறைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மிக கவனமுடன் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் பொழுது அதில் ஒதுங்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் கவர்களை சேகரித்து அப்புறப்படுத்தவும் அவற்றை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக கடலோரப் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *