மதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா….
மதுரை எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி, மஞ்சப்பை விழிப்புணர்வு, பனங்கிழங்கு அறுவடை செய்தல் ஆகிய முப்பெரும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை அருவகம் வரவேற்றார். விழாவில் தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டாக்டர் குணசேகரன் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
எந்த பொருளையும் தீயிட்டு எரிக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும் புகையில்லா போகி உறுதிமொழி யினை அவர் வாசிக்க அனைத்து மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் உறுதி ஏற்று கொண்டனர். அனைத்து குழந்தை களுக்கும் மரக்கன்று கள் வழங்கப்பட்டது.
உதவி பொறியாளர் உஷாராணி மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தடை செய்யப்பட்ட 14 வகையான நெகிழி பைகளின் பட்டியலை வாசித்து அதனை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினார். அனைத்து குழந்தை களுக்கும் மஞ்சப்பை வாசகம் பொரித்த மஞ்சப்பையை வழங்கினார்.
சமூக ஆர்வலர் அசோக்குமார் விவசாயி வேடமணிந்து பனை மரத்தின் பயன்கள், மாநில மரம் அதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார் விழாவில் மாணவ மாணவிகள், சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அனுஷியா, மனோன்மணி, சித்ரா, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.