எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி.
சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் நடுக்கடலில் பைபர் படகு இஞ்சின் வெடித்து தீப்பிடித்தது. தீக்காயத்துடன் கடலில் குதித்து உயிருக்கு போராடிய 6 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர். ஆனந்தபாபு இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி, தர்மராஜ், ஜீவானந்தம், மணியரசன், சித்திரவேல், பார்த்திபன் ஆகிய 6 மீனவர்கள் நேற்று மாலை திருமுல்லைவாசல் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றனர்.
சுமார் 20 கடல் மைல் தூரத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் என்ஜினில் திடீர் தீப்பிடித்து பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. இதில் பைபர் படகு முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
படகில் இருந்த மீனவர்கள் 6 பேரும் தீகாயத்துடன் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். வாக்கி டாக்கி கருவி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.