வலங்கைமான் அருகே மதகரம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்க பள்ளியில் உள்ள காய்கறி தோட்டத்தில் விளைந்த வாழைப்பழங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் “எங்கள் பள்ளி மிளிரும்பள்ளி” என்ற தூய்மை திட்டத்தின் கீழ்,அரசு துவக்கப்பள்ளி, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும். நிலம் இல்லாத பட்சத்தில் தொட்டில்கள் மற்றும் உபயோகித்த பிளாஸ்டிக் பொருட்கள், அரிசி பைகள் கொண்டு பள்ளி காய்கறி தோட்டங்களை அமைக்கலாம். காய்கறி தோட்டம் அமைக்கப்படவுள்ள பகுதிக்கு அருகே, நீர் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தும் வகையில் அந்தப் பகுதிகளுக்கு அருகில் தோட்டத்தை அமைக்கலாம். கத்தரி, தக்காளி, கீரைகள், கொத்தமல்லி, அவரைக்காய், மிளகாய், வெண்டைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பீன்ஸ், முள்ளங்கி, பப்பாளி ஆகிய நன்றாக வளரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைக்கலாம். விளைவிக்கப்படும் காய்கறிகளை பள்ளிகளில் மதிய உணவு தயாரிப்புக்கு வழங்கலாம். பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கவும், சுற்றுச்சூழல் மன்றம் சார்ந்த நிகழ்வுகளுக்கு ஆகவும், பள்ளி ஒன்றுக்கு ரூபாய் 5000 வீதம் வழங்கப்படும் என முன்னதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் வலங்கைமான் அருகே உள்ள மதகரம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் நல்ல துவக்க பள்ளியில் தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்க பள்ளி தலைமை ஆசிரியை புனித குமாரி மாணவர்கள் கூட்டு முயற்சியோடு பள்ளியின் அருகே காய்கறி தோட்டத்தை அமைத்தனர். அதில் விளைந்த காய்கறிகளை பள்ளி சத்துணவுவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காய்கறி தோட்டத்தில் வளர்க்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்களில், அஞ்சுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மகசூல் ஈன்ற நிலையில் வாழைத் தார்களை வெட்டி சீப்புகளாக பிரித்து மாணவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *