நம்பிக்கை கொடு! நம்பி கை கொடு !

நூல் ஆசிரியர் : கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணன் !

வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம்-636 007.

**

  நூலில் முதல் பக்கத்தில், “‘நன்றி’ எனக்கு முதல் வகுப்பு முதல் கற்றுக் கொடுத்த ஆசிரியப் பெருந்தகைகள் அனைவருக்கும்” என்று நன்றி சொல்லிய விதத்திலேயே நூலாசிரியர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களின் உயர்ந்த உள்ளம் உணர முடிகின்றது.

இவரது இயற்பெயர் ந.கிருஷ்ணவேணி. ஈரோடு மாவட்டம் சின்னமுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை திரு. க. இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளவையில் இருந்து சிறு துளிகள்.

 "தன் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் ரூ.8000 கடன் தவணைத் தொகை செலுத்தி வருகிறார். "

வங்கியில் கடன் பெற்று தன் பள்ளிக்குத் தேவையான பெஞ்சுகள், நாற்காலிகள், கணினி வாங்கித் தந்துள்ளார். இவரைப் போன்று பலர் அரசுப் பள்ளிகளுக்கு தன் சொந்தப் பணத்தில் உதவி வருவது நெகிழ்ச்சி, மகிழ்ச்சி.

  எழுத்தாளர் ஈரோடு கதிர், குழந்தை எழுத்தாளர் விழியன், தலைமை ஆசிரியர் வ.பாபு ஆகியோரின் வாழ்த்துரை நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்து உள்ளன. பாராட்டுக்கள்.

  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள் என மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள வாசகன் பதிப்பகம் கவிஞர் ஏகலைவனுக்கு பாராட்டுக்கள்.

  கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் கருத்தாழம் மிக்க வரிகள். தன்னம்பிக்கை விதைக்கும் வைர வரிகள். படிக்கும் வாசகர் உள்ளத்தில் தன்னம்பிக்கைப் பயிரை நடவு செய்திடும் நல்ல வரிகள்.  பாராட்டுக்கள்.  முதல் கவிதையிலேயே முத்திரை பதித்து உள்ளார்.

  “ஒவ்வொரு நொடியும் நமக்காகத் தான் / அதில்
  உயர்வதும் தாழ்வதும் / நம் கையில் தான்
  திட்டமிட்டு பயன்படுத்தினால் தான் /
        தினம் வெற்றிகள் வந்து மாலை ஆகும்
  வீணாய நாமும் செலவழித்தால் /
        தோல்விகள் தானே துரத்தி வரும்
  செய்வதை முறையாய் செய்யாமல் /
        நேரத்தை குறை சொல்லுதல் சரியாமோ?

  பொன்னை விட மேலானது பொழுது என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார். ஒவ்வொரு நொடியையும் பயனுள்ளதாகச் செலவழித்தால் சாதனைகள் நிகழ்த்தலாம்.  சிகரம் தொடலாம்.

  அளவிற்கதிகமான இன்பத்தை விட
        அளவுக்கதிகமான துன்பமோ
  அளவுக்கதிகமான அவமானமோ
        அளவுக்கதிகமான காயமோ
  நேரும் போது தான்
        மாபெரும் வெற்றி அடைகிறான் மனிதன்!

உண்மை தான். நாம் பட்ட காயங்கள், அவமானங்கள் சாதிக்க வேண்டும் என்ற வெறியை நமக்குள் உருவாக்கி வெற்றி பெற சாதிக்க உதவிடும் என்பது உண்மை.

  விரும்பிய பூக்களைக் கண்டால்
        கண்களும் காதல் கொள்ளும் !
  விரும்பிய இடம் செல்ல
        தொலைவும் குறைவாகத் தோன்றும் !

  விரும்பி கண்கள் கண்டால்
        மௌனம் மொழியாய் ஆகும் !
  இப்படி விரும்பிச் செய்தால்
        நாம் செய்யும் செயல் எல்லாம்
  எத்தனை எளிமையாய் ஆகும்?

  எந்த ஒரு செயலையும் விருப்பமின்றி, வேண்டா வெறுப்பாக செய்யாமல் விரும்பி செய்தால் வெற்றி பெற முடியும் என்பது முற்றிலும் உண்மையே.

  எழுத வருகிறதா / எழுதிப்பாருங்கள் !
  பேச வருகிறதா / பேசிப் பாருங்கள் !
  வரைய வருகிறதா / வரைந்து பாருங்கள் !
  ஓட வருகிறதா / ஓடிப் பாருங்கள் !
  உங்களுக்குள் இருக்கும் ஆற்றலைக் கண்டறியுங்கள்
  பேராற்றலாக மாற்றுங்கள் / தொடவியலாத சிகரம்   தொடுங்கள்!

  இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய பேராற்றல் மறைந்து இருக்கும். அது, எது, என்று கண்டுபிடித்து செயலாற்றினால் வாழ்க்கை சிறக்கும், சாதனை பிறக்கும், பிறந்தோம், இறந்தோம் என்று வாழாமல் பிறந்தோம் சாதித்தோம் என்று வாழ வேண்டும். இப்படி பல சிந்தனைகள் விதைக்கும் விதமாக நூல் முழுவதும் கவிதைகள் உள்ளன.

  நூலின் பெயருக்கு ஏற்றபடி நூல் படிக்கும் வாசகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் தான் உண்டு, தன் பள்ளி உண்டு என்று சராசரி தலைமையாசிரியர்கள் போல சுருங்கி விடாமல் தன்னம்பிக்கைக் கொடுக்கும் விதமாக கவிதைகள் எழுதி நூலாக்கி இருப்பது சிறப்பு.

நூலாசிரியர் கவிஞர் ஸ்ரீ பாரதி கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுக்கள். இவருக்கு உறுதுணையாக இருக்கும் இவரது கணவர் திரு. செல்லப்பன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

காவி ஆடையில் / உலகையே வலம் வந்த / விவேகானந்தர் !
அரையாடையில் / கோடான கோடி மனங்களில் / இடம் பிடித்த காந்தி !
வெள்ளைப் புடவையில் / உலகமே வணங்கும்படி வாழ்ந்த தெரசா!

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
எண்ணங்களில் உளதென நாமும் வாழப் பழகுவோம்!

எண்ணங்கள் நன்றாக இருந்தால் செயல்கள் நன்றாக இருக்கும்
நன்றாக இருக்கும் செயல் நன்றானால் சிறப்புகள் கிடைக்கும். வண்ணங்களால் ஆவது ஒன்றுமில்லை என்று உணர்த்தியது சிறப்பு.

  வீடு என்பது / உயிரற்ற பொருள் அல்ல
  உணர்வுடன் கலந்து உயிர்ப்புடன் விளங்கும்
  உன்னத உறவில் விடும் ஒன்று
  உறவுகள் சுமந்து உவகையுடன் வாழ்ந்து   
  உள்ளம் மகிழ்ந்து / உற்சாகமாய் உலாவரும்
  அற்புத உலகம் வீடு மட்டுமே / வீடே உலகம்
  என உணர்வாய் தோழா!

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். அன்போடு வாழும் வாழ்க்கை வரம். குடும்பத்தில் மகிழ்வோடு வாழ்வது சுகம். வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும். என்னடா வாழ்க்கை என்று வெறுக்காமல், நன்மையடா வாழ்க்கை என்று வாழ வேண்டும்.

கொள்கையில் நெருப்பாய் இருங்கள் /
பிறர் மரியாதை கொள்வார்கள்
உதடுகளில் / புன்னகையோடு இருங்கள் /
பிறர் மகிழ்ச்சியோடு அணுகுவார்கள்
உள்ளத்தில் / கருணையொடு உதவுங்கள் /
பிறர் கைகூப்பித் தொழுவார்கள்
அன்பான / சொற்களை பேசுங்கள்
பிறர் உங்களை நேசிப்பார்கள் !

வாழ்வியல் தத்துவம் கூறும் விதமாக கவிதைகள் உள்ளன. எப்படியும் வாழலாம் என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரைமுறையோடு வாழ்வாங்கு வாழ்ந்திட வழி சொல்லிடும் வைர வரிகள்.

வாசிக்க வாசிக்க / உன் சுவாசம் கூட சுத்தமாகும்
வாசித்தலை நேசித்தால் / உன் வாழ்வு பிரகாசமாகும்
வாசித்தலே தியான உணர்வு தரும் / பேராற்றல் மிளிரும்
வாசித்தால் தவம் போன்றது / தன்நிலை மறக்கச் செய்யும்!

வாசித்தல் தவம் என்றது சிறப்பு. பல சாதனையாளர்களையும், திறமையாளர்களையும், அறிஞர்களையும் உருவாக்கியது வாசிப்பு தான். வாசிக்கும் வழக்கம் வழக்கொழிந்து வரும் காலத்தில் வாசிப்பின் மேன்மையை உணர்த்தியது சிறப்பு, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *