வலங்கைமான் அருகே புகையான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா பயிருக்கு காப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளானாறு மூலம் பாசன வசதி பெறுகிறது.
இருப்பினும் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மின் மோட்டார்கள் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை துவங்கி ஆர்வத்துடன் செய்தனர்.
நடப்பாண்டில் 10 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு, இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெற்றது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் வலங்கைமான் பகுதியில் சம்பா அறுவடை ஜனவரி மாதம் கடைசிக்கு துவங்கி, மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வலங்கைமான் அருகே மாத்தூர் ஊராட்சி கிளாக்காடு பகுதியில் முன்னதாக சம்பா பட்டத்தில் 45 மா நிலப்பரப்பில் மின்மோட்டார் உதவியுடன் ஐ.ஆர் 20 என்ற ரக நெல் சாகுபடி செய்திருந்தனர்,
உழவு, நடவு, உரம், பூச்சிகள் நிர்வாகம் என அனைத்தும் மேற்கொள்ளப்பட்டதே அடுத்து பயிர்கள் நன்கு வளர்ந்து செழித்து இருந்த நிலையில், இம் மாதம் 25 ஆம் தேதிக்கு பிறகு அறுவடை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஒன்னாம் தேதி வயலில் லேசான புகையான் தாக்குதல் இருந்தது. பூச்சி மருந்து தெளித்து புகையானை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பூச்சி மருந்துகள் வாங்கி தெளித்தும் புகையணை கட்டுப்படுத்த இயலவில்லை.
வயலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்த புகையான் சுமார் 30 மா நிலத்தையும் ஆக்கிரமித்தது. புகையான் தாக்குதலால் பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்து தற்போது அறுவடை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. புகையான் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டு பாதிப்படைந்த விவசாயிக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
முன்னதாக பயிர் காப்பீடு செலுத்தி உள்ள நிலையில், உரிய காப்பீட்டு தொகையை வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.