வலங்கைமானில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் ரஷ்யா பேகம் வாக்காளர்விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தேர்தல் தனி தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் அரசினர் பல்வகை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டு, ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் வாக்காளர்கள் உரிமையை பயன்படுத்தி ஜனநாயக கட்டமைப்பை வலுப்படுத்த வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட,பல்வேறு கருத்துகளை கொண்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
வடக்கு அக்ரஹாரம், கடைத்தெரு மற்றும் கும்பகோணம் ரோடு, மாரியம்மன் கோவில் வழியாக மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது.