மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்…..
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளைக் கண்டித்து மாநில செயற்குழு முடிவின் அடிப்படையில், மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடடைபெற உள்ளது.
தமிழகத்தில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மாதந்தோறும் அவர்களது ஊதியத்தில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூபாய்.300 வீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு அரசாணையின்படி கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தமிழ்நாடு அரசிடமிருந்து அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள United India Insurance நிறுவனம் மற்றும் MD India, Medi Asst ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் அரசாணைப்படி சிகிச்சைக்கான முழுத்தொகையையும் அரசு ஊழியர்களுக்கு வழங்காமல் மிகப்பெரிய மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
ஒட்டுமொத்த சிகிச்சைக்கான தொகையில் 30% முதல் 40% வரை மட்டுமே தற்போதைய சூழலில் வழங்கி வருகின்றன. இதனால் சிகிச்சை பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடன் வாங்கி பல லட்சம் ரூபாய் சொந்தப் பணத்தை மருத்துவமனை
களுக்குச் செலுத்தி வருகின்றனர்.
இதனால் இத்திட்டத்தின் பலன் அரசாணைப்படி அரசு ஊழியர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் என்ன நோக்கத்திற் காகக் கொண்டு வரப்பட்டதோ அந்த நோக்கம் காப்பீட்டு நிறுவனங்களால் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்கிட வலியுறுத்தியும், முறைகேடுகள் புரிந்து வரும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 2024-2025 ம் நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதந்தோறும் தாமாகவே வருமான வரிப் பிடித்தம் செய்திடும் நடைமுறையைக் கைவிட்டு பழைய முறையில் ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில் வருமான வரித்தகையைப் பிடித்தம் செய்திட வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாவட்டக் கருவூல அலுவலகங்கள் முன்பாக ஜூன் 13 ம் தேதி அன்று மாலை அந்தந்த மாவட்டக் கிளைகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக சென்னையில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் முன்பு ஜூலை 17 ம்தேதி அன்று மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்திடவும் மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில செயற்குழு முடிவின்படி மதுரையில் மாவட்ட கருவூலக அலுவலக முன்பாகஜூன் 13ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக் கிளை சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டசெயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.