1950 ஆம் ஆண்டுமுதல் இப்போது வரை சீராக ஓடி சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருப்பது திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மணிக்கூண்டு.

1850ஆம் ஆண்டு ஆரம்பப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட புனித மரியன்னை பள்ளி,1923ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும்,
1979ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

அக்காலத்தில், கையில் கட்டும் கடிகாரம் வாங்க வசதியில்லாத மக்கள் நேரத்தை அறிந்து கொள்வதற்காக லண்டன் மாநகரில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபே என்ற கோபுர கடிகாரக்கூண்டு போல பள்ளியின் முகப்பில் மணிக்கூண்டு அமைக்க முடிவு செய்துள்ளனர்.

1944ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய தேவய்யா அடிகளாரின் முயற்சியால் கோபுரம் கட்டும் பணி தொடங்கியது.
இந்த மணிக்கூண்டு அமைக்க கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் கலை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்ட உதவியுள்ளார்.

திண்டுக்கல் நகரின் நான்குபுறமும் வசிக்கும் மக்களும் நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் பள்ளியின் ஓவிய ஆசிரியர் ஏசுமாணிக்கம் மணிக்கூண்டை வடிவமைத்துள்ளார்.
மணிக்கூண்டில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் பிரான்ஸ் நாட்டில் வாங்கப்பட்டது. இந்த கடிகாரத்தில் உள்ள பாகங்கள் அனைத்தும் துருப்பிடிக்காத வெண்கலம் மற்றும் உருக்கால் செய்யப்பட்டவை. மின்சார உதவியின்றி ஒரு சென்டிமீட்டர் பருமன் உள்ள முறுக்கு கயிற்றின் உதவியினால் இயங்கும் இந்த கடிகாரத்திற்கு வாரம் ஒருமுறை சாவி கொடுக்கப்படுகிறது.

வெளிப்பகுதியில் உள்ள கண்ணாடி பதினைந்து கிலோ எடையும். கடிகார முட்கள் ஒவ்வொன்றும் ஒருகிலோ எடையும் கொண்டவை.இயற்கையின் தாக்குதலை சமாளிக்கக் கூடிய வகையில் கடிகாரத்தில் வார்க்கப்பட்டுள்ள எண்கள் அனைத்தும் பள்ளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடிகாரத்தில் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அடிக்கும் மணியின் சப்தம் இப்போதும் ஒருகிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கும் தெளிவாக கேட்கிறது. 70 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது கடிகாரம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *