இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி இல்ல திருமண விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு நல்லாட்சி உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை எந்த அளவிற்குத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை. காரணம், இன்றைக்குமத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி, பொறுப்பேற்ற காலத்தில் இருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து, பா.ஜ.க. கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மக்களுக்குத் துன்பங்களை, கொடுமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அந்தத் தீய சக்தியோடு இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் காரியங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே அரசியல்வாதிகளை, அவர்களை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் சி.பி.ஐ., ஐ.டி., அமலாக்கத்துறை என்ற அந்தத் துறைகளை எல்லாம் வைத்து மிரட்டி கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. இங்கேகூட இந்தத் திருமணத்தை பற்றி பேசுகிறபோது, இது குடும்பக் கட்சியாக, எங்கள் குடும்பத்தில் நடைபெறும் திருமணமாக நடக்கிறது என்றெல்லாம் பலர் பெருமையோடு சொன்னார்கள். இதை கேட்டால் கூட பிரதமர் நரேந்திர மோடிக்கு கோபம் வந்துவிடும். ஏனென்றால் மத்திய பிரதேசத்தில் சென்று, நம்முடைய பிரதமர் என்ன பேசியிருக்கிறார் என்றால், மத்திய பிரதேசம் சென்றுகூடஅவருக்கு தி.மு.க.வின் நினைவுதான் வந்திருக்கிறது. அங்கே போய் என்ன பேசியிருக்கிறார் என்றால், குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சியில் இருக்கிறார்கள், கட்சி நடத்துகிறார்கள் என்று விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் அடுத்த நாளே, ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறபோது, ‘இது குடும்பக் கட்சிதான்.அண்ணாவால் உருவாக்கப்பட்ட, கருணாநிதியால் வளர்க்கப்பட்ட தி.மு.க. என்பது குடும்பக் கட்சிதான். இன்னும் சொல்ல போனால், தமிழ்நாடே தி.மு.க.வின் கட்சிதான். தமிழ்நாடே, கருணாநிதியுடைய குடும்பம்தான் என்று நான் அழுத்தம் திருத்தமாக சொன்னேன். எனவே அப்படிப்பட்ட குடும்பத்தில் இன்றைக்கு நடைபெறும் இந்தத் திருமண நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் மணமக்களை வாழ்த்துகிறேன். வாழ்த்துகிற நேரத்தில் மணமக்களை நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், அந்தக் குழந்தைகளை அளவோடு பெற்றுக் கொள்ள வேண்டும். பிறக்கும் அந்தக் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *