எஸ்.செல்வகுமார். செய்தியாளர்
சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கொட்டப்பட்டும் குப்பைகள். அவ்வப்போது எரிக்கப்பட்டுள்ளதால் கடும் புகை மூட்டம்.வாகன ஓட்டிகள் குடியிருப்புவாசிகள் அவதி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் கடைவீதி, ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிர்ப்புறம் மற்றும் பயணியர் விடுதி, சார் பதிவாளர் அலுவலகம் நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் காவல் நிலையம்,ரயில் நிலையம் எதிர்புறம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பகுதிகளிலும் குப்பைகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு தேங்கும் குப்பைகளையும், தூய்மை பணியாளர்கள் பல இடங்களுக்குச் சென்று சேகரித்தும் குப்பைகளையும் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் திணறி வருகின்றனர்.
கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டு வந்தது. சுகாதாரக் கேடு ஏற்படுவதாலும்,நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாலும் நீர்வளத்துறையால் குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் அந்த இடத்தில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. ஆனால் ஐந்து மாதங்கள் ஆகியும் குப்பை கொட்டுவதற்கு ஊராட்சி சார்பில் வேறு இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பை மற்றும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதனால் வேறு வழியின்றி ஆங்காங்கே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இவ்வாறு சாலையோரம் குப்பைகள் எரிக்கப்படும் போது உருவாகும் புகை சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது.மேலும் குடியிருப்பு வாசிகள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.எனவே ஊராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு உடனடியாக இடம் தேர்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.