வலங்கைமான் அருகே உள்ள கீழ அமராவதி பகுதியில் பழுகடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ அமராவதி பகுதியில் சித்தன் வாளூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்கரைக் குச்சிபாளையம் மற்றும் கீழ அமராவதி, மேல அமராவதி, மூலக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அங்காடி செயல்பட்டு வருகிறது. ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அங்காடிக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பாக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
கட்டிடத்தின் தரை தளம் முன்னதாக பழுதடைந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக காங்கிரட் மேற்கூரைகள் அவ்வப்போது பெயர்ந்து விழத் தொடங்கின.
அதனை அடுத்து மழைக் காலங்களில் கட்டிடத்தின் உட்பகுதியில் தண்ணீர் கசிந்து அரிசி, சீனி உள்ளிட்ட குடிமைப் பொருட்கள் சேதம் அடைந்தது.
இந்நிலையில் மழைக்காலங்களில் குடிமைப் பொருட்கள் சேதம் அடையாமல் இருப்பதற்கு தற்காலிகமாக அங்காடி கட்டிடத்தில் மேல் பகுதியில் பிளாஸ்டிக் பாய்க் கொண்டு மூடப்பட்டுள்ளது.
இருப்பினும் கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருப்பதால், இப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி பழைய அங்காடி கட்டிடத்தை இடித்துவிட்டு, அப்பகுதியிலேயே புதிய அங்காடி கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.