மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்மபூஷன் விருது நாளை டெல்லியில் வழங்கப்பட உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர்,
நாளை பத்மபூஷன் விருது பெற்றுக் கொண்டு வரும் பத்தாம் தேதி டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளோம்.பல கட்டங்களாக விருதுகள் வழங்கப்படுவதால் கடந்த முறை கிடைக்கவில்லை,நாளை நடைபெறும் விருது விழாவில் பெயர் இடம்பெற்றுள்ளதால் பெற்று கொள்கிறோம்.
விவசாயிகள் ஒருபுறம் தண்ணீர் பற்றாக்குறை ,பலத்த காற்றால் நெற்பயிர்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளது. மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் சந்தோஷமாக இருப்பதாக கூறும் முதல்வர் நேரடியாக மக்களை சந்தித்து சந்தோஷமாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பினார். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண முடியும், ஏழையின் சிரிப்பு விவசாயிகள் தான் ஒட்டு மொத்த விவசாயிகளும் வறுமையில் உள்ளார்கள்.
பத்திரப்பதிவு சேவை வரி யாரிடமும் அறிவிக்காமல் உயர்த்தியுள்ளனர். வரி என்பது மக்களுக்கு வலி இல்லாமல் இருக்க வேண்டும். சொத்து வரி, பால் கட்டணம், பஸ் கட்டணம் உட்பட அனைத்து வரிகளும் உயர்வதால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
நீட் விளக்கிற்காக 50 லட்சம் கையெழுத்தை பெற்று விட்டதாக கூறிய உதயநிதி ஸ்டாலின் நீட்டை ரத்து செய்து விட்டாரா என்றும் வெறும் அரசியலுக்காக வாக்குறுதிகளை கொடுக்கின்றனர்.
கேப்டன் உயிருடன் இருக்கும்போதே பத்மபூஷன் விருது கொடுக்காமல் இருந்தது வலிதான் என்றும் அவர் இருக்கும்போதே வாங்கி இருந்தால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கான பெருமையாக இருந்திருக்கும். இந்தியாவின் அனைத்து விருதுகளையும் பெறக்கூடிய தகுதி வாய்ந்தவர் கேப்டன் விஜயகாந்த், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த மக்களுக்காக சமர்ப்பிப்போம் என தெரிவித்தார்.