எஸ். செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன இந்நிலையில்
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியினை சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு வழங்காமல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலமாக ஆன்லைன் டெண்டர்கள் விடுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாகவும் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு தெரியாமலே பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியும் அதனை உடனே நிறுத்த கோரியும் ஊராட்சி மன்ற தலைவர்கள் நான்கு பேர் புத்தூர் கடைத் தெருவில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவரான கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நேதாஜி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உமையாள்பதி ஊராட்சி மன்ற தலைவர் கிள்ளிவளவன், அதிமுகவை சேர்ந்த காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், திமுக வை சேர்ந்த முதலைமேடு ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் உள்ளிட்ட நான்கு ஊராட்சி மன்ற தலைவர்களை போலிசார் கைது செய்தனர்.வாகனத்தில் ஏற மறுத்த ஊராட்சி மன்ற தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அடித்து குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர்.
அப்பொழுது அவர்களுக்கு ஆதரவாக வந்த கிராம மக்களும் அவர்களை கைது செய்ய விடாமல் சாலையில் அமர்ந்து வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சாலை மறியல் ஈடுபட்ட கிராம மக்களையும் போலீசார் விரட்டி அடித்தனர் .
இதனால் புத்தூர் கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஊராட்சி மன்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆதரவாக போராடிய கிராம மக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தால் புத்தூர் கடைவீதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.