கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பள்ளிக்கே செல்லாதோர் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் சார்ந்த வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார வளமையத்தில் நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் இருவரும் வட்டார அளவிலான குழுவின் செயல்பாடுகள் குறித்தும் பள்ளி செல்லாத குழந்தைகளை உடனடியாக பள்ளியில் சேர்க்கை செய்ய குழுவில் உள்ள அலுவலர்களின் வழிகாட்டுதல்கள் சார்ந்தும் எடுத்துக் கூறினர்.
மேலும் கந்தர்வகோட்டை வட்டார வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் மற்றும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை கண்டறிந்து பள்ளி இடைநிற்றல் பிரச்சனை தீர்ப்பதற்கும் பள்ளி அளவிலான குழுக்களின் செயல் திறனை மதிப்பிடுவதற்கும், பள்ளிக்கு வருகை புரியாத இடைநிற்றல் குழந்தைகளை மீளவும் பள்ளியில் சேர்க்கை செய்வதற்கும் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளை வழங்குவதற்கும் வட்டார அளவிலான குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி மாணவர்கள் சேர்க்கை செய்ய வேண்டிய வழிமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இக்குழுவானது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வட்டார அளவில் கூடி மாணவர்களின் சேர்க்கை குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அதன் முன்னேற்ற நிலை குறித்தும் விவாதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்களிடம் தமிழக அரசு கல்விக்கு செயல்படுத்தும் நலத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்துவது என்றும் ஆலோசனை செய்யப்பட்டது .
இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பிரான்சிஸ், வருவாய் துணை வட்டாட்சியர் பால்பாண்டி , வட்டார மருத்துவ அலுவலர் நவீன் வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலர் நிர்மலா தேவி , வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு உறுப்பினர் லூர்து மேரி ஆசிரியர் பயிற்றுநர்கள் பாரதிதாசன், ராஜேஸ்வரி இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக ஆசிரியர் பயிற்றுனர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் செய்திருந்தார்.