கோவை,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அணி துணைத் தலைவர் அஸ்வின் சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு நாட்களாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு அமைச்சரை கைது செய்வதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியான முறையில் பின்பற்றி தான் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறார்கள். திமுகவை பொருத்தவரை வழக்கம் போல இதற்கும் ஒரு விதமான அரசியலை செய்து வருகிறார்கள்.
மக்கள் அனைத்து விஷயங்களையும் பார்த்து வருகிறார்கள் .முந்தைய காலங்களைப் போல தற்போது எதையும் மறைக்க முடியாது. திமுகவின் அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.
அதில் சம்பந்தமே இல்லாமல் தலைவர் ஜி.கே .வாசன் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததற்கு முழு முக்கிய காரணமே தமிழ் மாநில காங்கிரஸ் தான் என்பதை மறந்து விடக்கூடாது. வயது முதிர்ச்சியால் ஆர். எஸ் .பாரதி அதனை மறந்திருக்கலாம். இது வருங்காலங்களில் இது போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் ஜி.கே.வாசன் குறித்து அவதூறு ஆன வகையில் பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2ஜி வழக்கில் இன்றைய திமுக தலைவரின் தங்கை கனிமொழி கைது செய்யப்பட்ட போது கூட திமுக இவ்வளவு பதட்டம் அடைந்ததில்லை.
திமுகவின் முழு ஊழல் பட்டியல் செந்தில் பாலாஜி இடம் உள்ளது என்பதால் இந்தப் பதட்டம் என்பதை மக்கள் அறிவார்கள். செந்தில் பாலாஜி விவகாரத்திற்கும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குறித்து பேசுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நேர்மையான எளிமையான அரசியல்வாதி ஒருவர் என்றால் அது ஜி.கே.வாசன் தான். அவர் குறித்து கருத்து சொல்வதற்கு திமுகவினருக்கு எந்த தகுதியும் கிடையாது.
எனவே வரலாறை மறந்து விட்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.