வலங்கைமான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு ரூ 1 கோடியில் கட்டப்பட்ட 500மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்ததை அடுத்து புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நபார்டு திட்டத்தின் கீழ் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய கிடங்கு ரூ 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக
தமிழக முதல்வர் காணொளி காட்சியின் மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து புதிய கட்டிடத்தில் ஒழுங்கு முறை விற்பனை கூட மேலாளர் வீராசாமி குத்துவிளக்கு ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.