கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக நெகிழி ஒழிப்பு தினம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிறப்பாசிரியர் அறிவழகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமத்துல்லா உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தின குறித்து பேசியதாவது
இந்த உலகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் எந்த அளவிற்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதோ அதே அளவிற்கு பூமியில் சீர்கேடுகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்த சுற்று சூழல் மாசடைவதற்கு மிக முக்கியமான காரணி நாம் அதிகமாக பயன்படுத்தும் நெகிழி பொருட்களின் வளர்ச்சி தான். பிளாஸ்டிக்கால் இந்த உலகத்தில் என்னென்ன தீமைகள் ஏற்படுகின்றன.
என்னதான் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும் அதனால் விளையும் தீமைகள் ஏராளமானது. இந்த நெகிழியை தயாரிக்கும் போது வெளிப்படும் ரசாயன கழிவுகள் நீர் நிலைகளில் கலந்து நீரை மாசுபடுத்துகிறது. அதுமட்டும் இல்லாமல் நீர் நிலைகளில் வாழும் உயிரினங்களை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது .
பிளாஸ்டிக் ஒரு மக்காத குப்பைகள் இவை எளிதில் மண்ணின் வளத்தை சிதைப்பது மட்டும் இல்லாமல், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை தடுக்கிறது. பாலிதீன் கவர்கள் பல ஆண்டுகள் பூமியில் மக்காமல் அப்படியே இருக்கின்றன, மாறிவரும் இந்த பூமியின் வறண்ட நிலைக்கு முக்கிய காரணம் இந்த நெகிழி தான்.நாம் ஹோட்டலில் வாங்கும் உணவு பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் இருப்பதால் அவை உடலுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துகின்றன.
நாம் உண்ணும் உணவு பொருட்களை பாலிதீன் கவர்களை பயன்படுத்தாமல் வாழை இழையை பயன்படுத்தலாம், தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மண் பானை, சில்வர் பாத்திரம் போன்றவற்றை உபயோகிக்கலாம்.
சந்தைக்கு செல்லும் பொழுது கூடைகள், துணி பைகள் போன்றவற்றை உபயோகிப்பது நல்லது.
முடிந்த வரை பாலிதீன் கவர்களை தயாரிக்காமல், உபயோகிக்காமல் இருக்கலாம் அல்லது நெகிழி பொருட்களை மீள் சுழற்சிக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு நெகிழியை பயன்படுத்தாமல் இருந்தால் பிளாஸ்டிக் மாசுக்களை தவிர்க்கலாம் என்று பேசினார். இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வியை தன்னார்வலர்கள் கலைமதி,மீனா, பரமேஸ்வரி,ஆதரசி கலந்து கொண்டனர்.
நிறைவாக தற்காலிக ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.