எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 346 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது 201 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது அனைத்து பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது சீர்காழியில் அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் பேட்டி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக கொள்ளிடம் ஒன்றியத்தில் 10 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவானது.
இதனை எடுத்து மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றதுறை அமைச்சர் சிவ.வி மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இன்று மழை சற்று ஓய்ந்திருந்ததால் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது.
தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் பழையாறு பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் 346 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 201 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுவதுமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி இருந்த பகுதிகளில் முழுவதுமாக தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று உள்ளது .
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்காக தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கை தகவல் கொடுத்தால் அவர்களுக்கான அனைத்து நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்படும். சில இடங்களில் மழையின் காரணமாக சாலை மற்றும் சிறு பாலங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவற்றை விரைவில் சீரமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது முழுவதுமாக கணக்கெடுக்கப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.