தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்
தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு பால்குட விழா. ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பால்குடம் எடுத்து வழிபாடு.தருமபுரம் ஆதீனம் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். இன்று தை அம்மாவாசையை முன்னிட்டு பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மஞ்சள் உடை உடுத்தி ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆணைகுளக்கரையில் அமைந்துள்ள எதிர்காலேஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். கோயில் வாசலில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து அபிராமி அம்மன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பால்குடம் எடுத்து வந்த பக்தர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருளாசி வழங்கி பிரசாதங்கள் வழங்கினார்.