பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 180 கிலோ குட்கா பறிமுதல் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது
அணைக்கட்டு
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் கடத்தி செல்லப்பட்ட 180 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்தனர்.
தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்காணிக்க தமிழக முழுவதும் உள்ள காவல்துறையினர் மூலமாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இன்று காலை துணைக் காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் பள்ளிகொண்டா போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசு கார் ஒன்றை சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தி சோதனை செய்த போது காரில் தடை செய்யப்பட்ட 15 பிளாஸ்டிக் மூட்டைகளில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 180 கிலோ குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் குட்கா பொருட்களை கொண்டு சென்ற ராஜஸ்தான் மாநிலம், சான்சூர், மாதவ் நகர்
பகுதியை சேர்ந்த ஜோகாராம் (25) என்பவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.