துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு முத்துலாபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஜெயமுருகன்- பாண்டியலட்சுமி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கடைசி மகன்தான் மாதவன்(17). தன்னுடைய 12 வயதில் தனக்குள் பெண்மை அதிகமாய் இருப்பதே மாதவன் உணரத் தொடங்கி உள்ளது மட்டுமின்றி, மற்றவர்களும் அவரது நிலையைப் பார்த்து கேலி கிண்டல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
மாதவன் தனது பெயரையே சாதனாலட்சுமி என்று மாற்றிக் கொண்டு, கோவில்பட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாதவன்(எ) சாதனாலட்சுமி 289 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
மாதவனின் பெண்மை நிலை தெரிந்ததும் அவருடைய தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததும், இவர் பள்ளி ஆசிரியர் ஒருவரும் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் 12ம்வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியைகள் இவருக்கு பாடம் எடுக்க மறுத்ததை தொடர்ந்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை ஆலோசனை படி பள்ளிக்கு வராமல் வீட்டில் இருந்து பாடங்களை படித்து அரசு பொதுத் தேர்வில் 289 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்
தனது குடும்பத்தினர் எதிர்ப்பினை மீறி மாதவன்(எ) சாதனாலட்சுமி தாய் உறுதுணையாக இருந்துள்ளார்.
தந்தை மற்றும் ஆசிரியரால் பாலியல் தொல்லை, பாடம் எடுக்க மறுத்த ஆசிரியர்கள், கேலி கிண்டல்கள் என பல்வேறு துயரங்களையும் கடந்து மாதவன்(எ) சாதனாலட்சுமி 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
மருத்துவ துறையிலான படிப்பு மற்றும் மாடலிங் துறையில் சாதிக்க ஆசை இருப்பதாக மாதவன்(எ) சாதனாலட்சுமி தெரிவித்துள்ளார்