கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகில் சுற்றுச்சூழல் அதிகாரிகள், போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் இணைந்து வாகனங்களை அதிரடியாக சோதனை செய்து ஏர் ஹாரன்களை அகற்றினர்.
பஸ், லாரி, டேங்கர் உள்ளிட்ட கனரக வாகனங்கள், அதிக லோடுகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சத்ததினால், பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட 2 சக்கர வானங்களில் பயணம் செய்பவர்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அதுபோல், அதிக ஒலியினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால், வாகனங்களில் 75 டெசிபல் சத்தத்துக்குமேல் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சுழல் அதிகாரி ரவி, உதவி இன்ஜி., பிரதீப் பாண்டியன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி ராஜ்யஸ்ரீ, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சண்முகம் , கோவில்பட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் செல்வக்குமார்,உள்ளிட்ட அதிகாரிகள் அதிரடியாக வாகனங்களை ஆய்வு செய்தனர். இதில், அதிக சத்தம் எழுப்பிய வண்ணம் வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள மற்றும் மினி பஸ்களை மடக்கி, அதில் பயன்படுத்தப்பட்டு வந்த ஏர் ஹாரனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.