பெரம்பலூர் துறைமங்கலம் பெரிய ஏரியின் வலது பக்க கரையை பலப்படுத்துதல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் ரூ.49 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் அவர்கள் மே-10 ஆம் தேதியான இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமங்கலம் பெரிய ஏரியானது மருதையாறு வடிநிலக் கோட்டத்தின் கட்டுபாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு இலாடபுரம் பெரிய ஏரி, இலாடபுரம் சிறிய ஏரி, குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை ஏரி, பெரம்பலூர் மேல ஏரி மற்றும் கீழ ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து வரத்து வாய்க்காலின் வாயிலாகவும், மருதையாற்றில் விளாமுத்தூர் அருகில் உள்ள அணைக்கட்டிலிருந்தும் மற்றும் இதர நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்தும் ஏரிக்கு தண்ணீர் வரப் பெறுகிறது.
துறைமங்கலம் பெரிய ஏரியின் கரையின் நீளம் 1064 மீட்டர் ஆகும். இந்த ஏரியில் இரண்டு பாசன மதகுகளும் இரண்டு உபரிநீர் வழிந்தோடியும் (16.25 மீட்டர், 5.75 மீட்டர் நீளம்) உள்ளது. மேலும் ஏரியின் முழுக்கொள்ளளவு 17.22 மில்லியன் கனஅடி ஆகவும், இதன் மொத்த பரப்பளவு 48.50 ஹெக்டேர் ஆக உள்ளது. இந்த ஏரியில் உள்ள பாசன மதகுகள் முலம் 273.80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த துறைமங்கலம் எரி நீர்வளத்துறையின் மூலம் தூர்வாரப்பட்டு வருவதைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மழைக்காலம் வருவதற்குள் ஏரி முழுவதும் தூர்வாரப்பட்டிருக்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த ஏரிக்குள் கழிவு நீர் கலக்கும் வகையில் குழாய்கள் அமைக்கபட்டிருந்தால் அவற்றை உடனியாக அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் தவேல்முருகன், உதவி பொறியாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் பாண்டியராஜன், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.